வெளியூரில் வேலை செய்யும் பெண்கள் என்று இங்கு குறிப்பிடக் காரணம், பல விஷயங்களை அவர்கள் தனியாக சந்திக்க வேண்டியிருப்பதால்.
இது அனைத்துப் பெண்களுக்குமே பொருந்தும் என்பதால், தொடர்ந்து படியுங்கள்.
வேலைக்குச் செல்லும் போது, தாமதமாகிவிட்டால், இரவில் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பும் பெண்கள், சீக்கிரமாக போக வேண்டும் என்பதற்காக தனியாக டாக்சி, ஆட்டோக்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். நேரமானாலும், பாதுகாப்பானதாக இருக்கும் பொதுப் போக்குவரத்தான ரயில் அல்லது பேருந்தை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.
பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் போது நமக்கு ஏதேனும் பிரச்னை எழுந்தாலும், உடனிருப்பவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
சரி… பொதுப் போக்குவரத்துக்கு வழியே இல்லை. ஆட்டோவோ அல்லது கால்டாக்ஸியிலோ தான் பயணிக்க வேண்டி வந்தால், சாலையில் வரும் ஆட்டோவில் ஏறாமல், ஆட்டோ ஸ்டேன்டில் நின்று கொண்டிருக்கும் ஆட்டோவில் ஏறுவது நலம். ஏன் என்றால், ஒரு ஆட்டோ ஸ்டேன்டில் நிற்கும் அனைத்து ஆட்டோக்களின் விவரமும் மற்ற ஒட்டுநர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அடுத்தது, டாக்ஸி அல்லது ஆட்டோவை கட்டணம் நிர்ணயித்து ஏறி உட்கார்ந்து விடாதீர்கள். உங்களுடன் தங்கியிருக்கும் நண்பர்கள் அல்லது உங்களது பாதுகாப்பை விரும்பும் நபர்களுக்கு, நீங்கள் பயணிக்கும் வாகனத்தின் எண்ணை முழுவதுமாக மெசேஜ் செய்து விடுங்கள்.
இல்லை என்றால், வாகன ஓட்டுநருக்கு தெரியும் வகையில் வாகனத்தின் பதிவு எண்ணை செல்பேசியில் கூறுவதும் கூட எச்சரிக்கையாக இருக்கும்.
அடுத்தபடியாக, வாகனத்தில் ஏறி உட்கார்ந்ததும், வேலை களைப்பில் கண்ணை மூடி தூங்கலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். நீங்கள் போகும் பாதை, ஓட்டுநரின் போக்கு ஆகியவற்றை கவனித்துக் கொண்டே வாருங்கள். அந்த நேரத்தில் செல்போனில் வீண் அரட்டை, இணையதளத்தில் நோண்டல்களை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். இதனால் உங்களது கவனம் சிதறும்.
நீங்கள் விழிப்போடு இருப்பதை ஓட்டுநருக்கும் தெரியப்படுத்துங்கள். ஓட்டுநருக்கு தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டாமல் இருக்க அது வழி வகுக்கும்.
வெகு தூரப் பயணம் எனில், நீங்கள் ஒவ்வொரு பகுதியையும் அடையும் போது, உங்கள் பெற்றோருக்கோ அல்லது நண்பர்களுக்கோ அதனை மெசேஜ் செய்யுங்கள்.
வழியில், ஆணோ, பெண்ணோ லிப்ட் கேட்டாலும் அவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொள்ள அனுமதி அளிக்காதீர்கள். பெண் தானே என்று நினைத்து லிப்ட் கொடுத்தால், சில சமயங்களில் அதுவும் நமக்கு வினையாகலாம்.
ஒரு வேளை, உங்களது அனுமதியின்றி, வேறொரு நபரை, ஓட்டுநர் வாகனத்தில் ஏற்றிக் கொள்ள அனுமதித்தால், உடனடியாக தாமதிக்காதீர்கள். வண்டியை நிறுத்தி அல்லது நின்றிருக்கும் வண்டியில் இருந்து இறங்கி, உதவிக்கு ஆட்களை அழையுங்கள். நிலைமை விபரீதமாவதாக உணர்ந்தால் உடனடியாக உங்கள் செல்போனில் இருந்து 100க்கு கால் செய்து காவலர்களின் உதவியை நாடலாம்.
வீட்டுக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்ற நினைப்பை விட, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எந்த அசம்பாவிதத்திலும் உதவிக்கு மற்றவர்களை அழைக்க யோசிக்க வேண்டாம்.
from WordPress http://ift.tt/1FGijz9
via IFTTT